January 4, 2017

இணையவழியில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.5 சலுகை.

இணையவழியில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.5 சலுகை.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான (எல்பிஜி) விலையை இணையவழியில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.5 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.500, ரூ.1,000 ஆகிய உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து, ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், பெட்ரோல், டீசல் வாங்கும்போது அதற்கான பணத்தை ரொக்கமில்லா பரிவர்த்தனையின்மூலம் மேற்கொள்வோருக்கு 0.75 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.60-க்கும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.57.82-க்கும் விற்கப்படுகிறது. இதில் இணையவழி உள்ளிட்ட ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் பெட்ரோல் வாங்குவோருக்கு லிட்டருக்கு 53 காசுகளும், டீசல் வாங்குவோருக்கு லிட்டருக்கு 43 காசுகளும் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சலுகையை சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் நீட்டித்துள்ளன. அதாவது, இணையவழியில் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்து, அதற்கான பணத்தை இணையவழியில் இணையவங்கி வசதி, கடன் அட்டை, பற்று அட்டை (கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு) மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூ.5 சலுகையை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை தொகை ரூ.5, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான பணம் செலுத்தப்பட்ட நாளில் இருந்து 3 வேலை நாள்களில், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, தில்லியில் தற்போது ரூ.434.71-ஆக உள்ளது. மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.585-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment