January 8, 2017

இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்.

இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்.

கார், பைக், ஏசி, 2 சிலிண்டர்கள் வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் அரிசியை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 1.20 கோடி கார்டுதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 33, 973 ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, குறைந்தவிலையில் துவரம், உளுந்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த பொருட்கள் இனி மானிய விலையில் கிடைப்பது படிப்படியாகநிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  மத்திய அரசு நாடு முழுவதும் உணவுப்பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டியது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது மக்கள் நலனுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்த வகையில் உணவு பாதுகாப்பு திட்டமும் ஒன்று.

ஓபிஎஸ் ஆதரவு:

 ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எந்தெந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாரோ, அந்த திட்டங்களுக்கு எல்லாம் ஓபிஎஸ் தலைமையிலான அரசுதற்போது மறைமுகமாக ஆதரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்துள்ளது. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு திட்டப்படி, குடும்பத்தில் நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்க வேண்டும். இதுவரை ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் 20 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்பட்டது.

ஆனால் உணவு பாதுகாப்புச் சட்டப்படி ஒரு குடும்பத்தில் 6 பேர் இருந்தால் அவர்களுக்கு 30 கிலோ அரிசி வழங்க வேண்டும். இதனால் வழக்கத்தைவிட கூடுதலான அரிசி கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது.மக்களை கடனாளியாக்கும் முடிவு: தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் அரிசியின் விலையை மத்திய அரசு உயர்த்தியது. அதன்படி ஒரு கிலோ ரூ.8.30ல் இருந்து ரூ.21.40 ஆக அதிகரிக்கப்பட்டது. திடீரென இருமடங்கு விலை உயர்த்தப்பட்டதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை மேலும் அதிகரித்தது. தற்போது அரிசிக்காக மட்டும் தமிழக அரசு சுமார் ரூ.2,700 கோடி செலவிடுகிறது.

இந்த விலையில், அரிசி வழங்குவதால் ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் தமிழகத்தில் 60 சதவீத குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அரிசியை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது.யார் யாருக்கு அரிசி கிடைக்காது ரேஷன்கடை ஊழியர்கள் கூறியதாவது: ஒரு வீட்டில் 2 சிலிண்டர்கள், கார், பைக், ஏசி வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் அரிசியை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உணவுப்பொருள் வழங்கல்துறை ரகசிய சர்வே நடத்தி உள்ளது. அதில் கிடைத்துள்ள பட்டியலை வைத்து ரேஷன் கார்டை என்பிஎச்எச்(non priority house holder), பிஎச்எச்(poor house holder) என 2 பிரிவுகளாக பிரித்துள்ளனர். சிலிண்டர், ஏசி, பைக், கார் வைத்திருப்பவர்கள் என்எச்எச் பிரிவிலும், எதுவும் இல்லாதவர்கள் பிஎச்எச் பிரிவிலும் சேர்க்கப்படுவார்கள். இதற்காக 3 படிவங்கள் தயாரித்துஅதை எங்களிடம் வழங்கி வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும்படி ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

முதல் படிவத்தில், குடும்பத்தில் உள்ளவர்களில் யார், யாரெல்லாம் ஆதார் கார்டு வாங்கி உள்ளனர் என்ற விவரமும், 2வது படிவத்தில் வீட்டில் ஏசி, கார், பைக், 2 சிலிண்டர் உள்ளதா என்ற விவரமும், 3வது படிவத்தில் இதுவரை ஆதார் கார்டு வாங்காத நபர்கள் அவர்களின் முகவரில் வசித்து வருகின்றனரா என்ற விவரமும் பதிவு செய்யப்படுகிறது. கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் மிக ரகசியமாகவும், மறைமுகமாகவும் நடக்கிறது. கணக்கெடுப்பின் இறுதியில் கார், பைக், ஏசி, 2 சிலிண்டர் வைத்திருக்கும் குடும்பத்தினரை NPHல் இணைத்து அவர்களுக்கு அரிசியை ரத்து செய்ய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 2கோடி அட்டைத் தாரர்களில் சுமார் 1.20 கோடி கார்டுகளுக்கு அரிசியை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சென்னையில்  12 லட்சம் பேருக்கு அரிசி ‘கட்’தமிழகத்தில் முதல்கட்டமாக சென்னையில் இப்பணிகள் வேகமாக நடக்கிறது. சென்னையில் உள்ள 20 லட்சம் ரேஷன் கார்டுகளில் 60 சதவீதம்(12 லட்சம்) கார்டுகளுக்கு அரிசி ரத்தாகும் என தெரிகிறது. அரசின் இந்த நடவடிக்கையால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றனர்.

No comments :

Post a Comment